India oi-Halley Karthik
Updated: Thursday, June 22, 2023, 20:29 [IST]
பெங்களூரு: கர்நாடகாவில் தகர கொட்டகையில் வசித்து வரும் 90 வயது மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் கரண்ட் பில் வந்திருக்கும் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மின்சார கட்டண உயர்வு தொடர்பாக சிறு குறு வணிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் பல்வேறு யூகங்களை வகுத்திருந்தது. அதில் தேர்தல் வாக்குறுதிகளும் ஒன்று. இந்த வாக்குறுதியில், மாநிலம் முழுவதும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது. இப்படி இருக்கையில், தேர்தல் வாக்குறுதியான இலவச மின்சார திட்டத்தை மாநில அரசு உடனடியாக அமல்படுத்தியது. ஆனால், அதன் பின்னாலேயே மற்றொரு ஷாக் செய்தியையும் அரசு கூறியிருந்தது. அதாவது 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்பதுதான் அந்த ஷாக் செய்தி. இதற்கு சிறு குறு வணிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். நேற்று மாநில அரசின் இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி கடையடைப்பு போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், மின்சார கட்டணம் தொடர்பான செய்தி ஒன்று மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. அதாவது கோப்பல் மாவட்டத்தின் பாக்யா நகரில் வசித்துவரும் மூதாட்டி ஒருவருக்கு ரூ.1 லட்சம் கரண்ட் பில் வந்திருக்கிறது. கிரிஜம்மா எனும் இந்த மூதாட்டி தகர கொட்டகையில் வசித்து வருகிறார். வழக்கமாக இவருக்கு ரூ.70-80 வரை மட்டுமே கரண்ட் பில் வரும். ஆனால் இந்த முறை திடீரென ரூ. 1 லட்சம் பில் வந்திருப்பது பாட்டிக்கு நிஜமாகவே ஷாக் அடித்ததைப் போல இருந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சோஷியல் மீடியாக்களில் கரண்ட் பில்லை ஷேர் செய்து மின்சார வாரியத்திடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனையடுத்து, இந்த விவகாரம் வெளியில் பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகையில், “மீட்டரில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தவறாக பில் வந்திருக்கிறது. மூதாட்டி இந்த கட்டணத்தை கட்ட தேவையில்லை” என்று கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத்துறை செயற்பொறியாளர் ராஜேஷ், மூதாட்டியின் கொட்டகைக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வில் மீட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் இந்த பிரச்னைக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் கூறியதை போல ஊழியர்கள் மின் கட்டணத்தை ரத்து செய்துள்ளனர். ஏற்கெனவே மின் கட்டண உயர்வு தொடர்பாக சிறு குறு வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
A 90-year-old woman living in a tin shed in Karnataka has received a electricity bill of Rs 1 lakh, which has created a lot of buzz.

