இவ்வாறாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்பு, ஆதரவு என கருத்துகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. அதன்படி முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “கறுப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை. பிழையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக்கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சந்தை கொடுக்கல், வாங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் கிடையாது. ரூ.2,000 நோட்டுகள் அனைத்தும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கைகளில் மட்டுமே இருக்கின்றன” எனக் குற்றம்சாட்டியவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும், சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன என்ற பாஜக-வின் வாதம் முறியடிக்கப்பட்டது.

